Saturday, May 9, 2009

நம் தாய்த்தமிழ் உறவுகளே! ஈழத்தமிழரைக் காப்பாற்ற இது இறுதிச் சந்தர்ப்பம்...

தமிழக உறவுகளே! ஓட்டுப் போடமுன் ஒரு நிமிடம்...!

நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன்.


கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.
வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்றனர் நம் ஈழ உறவுகள்.கொடுத்தே பழகிய அந்தக் கரங்கள் இன்று கையேந்தி நிற்கின்றன ஒரு நேர கஞ்சிக்காக...!


பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள். கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை . எறிகணைகளுக்குத்தான் தெரியுமா அவை பிஞ்சா தளிரா என்று? கற்புக்கே கற்பு கற்பிக்கும் ஈழத்தின் பெண்மை அங்கு சீரழிக்கப்படுகிறது.சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார். கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள். என்ன கொடுமையிது !!!
ஈழ உறவுகளின் அழுகுரலில் ஆர்ப்பரிக்கின்றது வங்கக்கடல். அவலந்தந்த கண்ணீரில் மூழ்கின்றது முல்லைக் கடல். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் வன்னிமண், பேரவலம் வந்தேறி பரிதவித்து நிற்கின்றது . வீரம் செறிந்த அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இது சோதனைக் காலம். பெருந்துயர்படிந்த வேதனைக் கோலம்.


பேரன்புமிக்க தமிழக உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இப் பேரவலத்தினைக் கொடுத்த அந்த பாவிகள் யார்?
சிங்களம் என்றுதான் பதில் வரும். உண்மைதான்! ஆனால் சிங்களம் மட்டுமல்ல. சிங்கள வல்லாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்த பல சக்திகளுங்கூட. அதில் பிரதானமாய் இந்தியா இருப்பது நமக்கெல்லாம் பேரதிர்ச்சி. நம் துயர்துடைக்கும் என்று நாம் நம்பியிருந்த இந்தியாவே நம் உறவுகளை அழிக்க பேராதரவு கொடுத்து நிற்கின்றது சிங்கள அரசிற்கு.


எங்கள் அவலங்களைப் பார்த்து தாங்கொணாமல் நீங்கள் துடிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது பாசமிகு தமிழக உறவுகளே!
தினந்தினம் அநியாயமாய் செத்து மடியும் ஈழத்தமிழ் உறவுகளின் பிணங்களைப் பார்த்து நீங்கள் பதைபதைப்பது நம் கண்களில் தெரிகின்றது. தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தமிழீழத்தின் பிஞ்சுக் குழந்தைகளின் சிதறிய உடல்களைப் பார்த்து கல்நெஞ்சங்கள் கூட கரைந்துதான் போயின. உணர்வுள்ள உங்கள் உள்ளங்கள் உடைந்து வெதும்பின. கண்ணீர் கொப்பளிக்க கதறியழுத ஈரமான உள்ளங்கள் எத்தனையோ. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய முத்துக்குமார் வழிநடந்த தியாகவீரர்கள் பலர். ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள்,மனிதச்சங்கிலிகள்,உண்ணாவிரதங்கள் என சாதாரண மக்களாக உங்கள் ஈழ உறவுகளின் அவலம் நீக்க, போரை நிறுத்தக்கோரி நீங்கள் செய்த அத்தனைக்கும் நாம் தலை வணங்குகின்றோம்.உங்கள் ஆதரவும் அன்பும் உணர்வும் எங்களுக்கு நன்கே புரியும். அவலத்தின்மேல் அவலப்பட்ட மக்களுக்கு உங்கள் ஆதரவு எரியும் நெருப்பை அணைக்கும் நீராய்த் தோன்றியது. ஆனாலும் சிங்கள வல்லாதிக்கத்தின் பிடிவாதமான போர்வெறியும், தமிழுணர்வுக்கு துளியும் மதிப்புக் கொடுக்காத காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் பழிதீர்க்கும் மனப்பாங்கும் சேர்ந்து, உங்கள் போராட்டங்களையெல்லாம் வீணாக்கி விட்டன. உங்களது போராட்டங்களால் விடியல் வரும் என்று காத்திருந்த ஈழத்தமிழருக்கு அவை கானல் நீராகவே போயின.
எதைக்கேட்டாலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையையே புராணம் பாடும் இந்த காந்திய காங்கிரஸ். கங்கிரஸாரிற்கு அதைவிட்டால் வேறு காரணங்கள் கிடையாது. அன்று புலிகள்தான் செய்தார்கள் என்று தாமாகவே முடிவுசெய்த காந்திய காங்கிரஸ், இன்று அதற்கு பழிதீர்க்க அனைத்து தமிழருக்கும் முடிவுகட்ட முண்டியடித்து நிற்கின்றது சிங்களதேசத்துடன், இந்திய அரசு என்னும் அதிகாரத்தோடு. இந்த அதிகாரத்தினை அவர்களுக்கு கொடுத்தவர்கள் நீங்கள்தான் தமிழக உறவுகளே! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அளித்த நாற்பதுக்கு நாற்பது ஆசனங்கள்தான் அவர்களை மத்தியில் அதிகார ஆசனத்தில் அமரவைத்தது. ஆனால் நீங்கள் விடுத்த கோரிக்கைகளையெல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டார்கள். கேட்டும் கேளாமல் இருந்தார்கள். சில சமயங்களில் செவிசாய்ப்பதுபோல் நாடகமாடினார்கள். இந்த நிமிடம் வரைக்கும் உங்கள் உறவுகளுக்கான உங்கள் கோரிக்கைகளுக்கு எதிராகவே நடந்து வருகின்றார்கள்.


தன்னை "தமிழினத் தலைவர்" என சொல்லிக் கொள்ளும் மான்புமிகு தலைவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. எதிர்பார்ப்புக்களைக் கொடுத்து ஏமாற்றினார்கள் தம் சுயநலங்களுக்காக. பணத்துக்காகவும் பதவிக்காகவும் உங்கள் ஈழ உறவுகளின் உயிர்களை ஏலம்விட்டார்கள்.தம் குடும்ப நலன்களுக்காக ஈழத்தமிழர் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை என கைகழுவி விட்டார்கள். பதவி விலகல்கள், தந்திகள், கட்சிக் கூட்டங்கள், உண்ணாவிரதம் என பலவிதமான கபட நாடகங்களை அரங்கேற்றினார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்க நல்லதொரு சந்தர்ப்பம் உங்கள் முன்றலிலேயே வந்து நிற்கின்றது.


தமிழகம் மீண்டுமொருமுறை நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டது. இத்தேர்தல் முடிவில் அவலப்படும் ஈழத்தமிழினத்தின் வாழ்வும் தாழ்வும் அடங்கியிருக்கின்றது என்பது தமிழக உறவுகள் நீங்கள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.மீண்டுமொருமுறை காங்கிரஸ் அரசமைக்க நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்களானால் அது ஈழத் தமிழினத்தினை அழித்தொழிக்க நீங்களே அனுமதி கொடுப்பதற்கு சமனாகும்.
சர்வதேசமெங்கும் ஈழ ஆதரவு பெருகிவருகையில் அவற்றின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸின் தமிழின எதிர்ப்புக் கொள்கைகளுக்குள் தமிழகமும் அடக்கப்பட்டு அடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.எனவே,
தமிழினத்துக்கு எதிராகவே எப்பொழுதும் கொள்கை வகுக்கும் காங்கிரஸிற்கு இந்த முறை தகுந்த பாடம் புகட்டுங்கள் தமிழக உறவுகளே!


இவ்வளவு காலமும் கட்சிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! சாதிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! மதத்துக்காக ஓட்டுப்போட்டீர்கள்! சலுகைகளுக்காக ஓட்டுப் போட்டீர்கள்! அப்போதெல்லாம் மாறுதல்களோ நன்மாற்றங்களோ வந்ததாக தெரியவில்லை. இம்முறை உங்கள் இனத்துக்காக ஓட்டுப் போடுங்கள்! உங்கள் உறவுகளின் கண்ணீரைத் துடைத்த புண்ணியமாவது உங்களுக்குக் கிடைக்கும்.
ஓட்டுப் போடுவதற்குமுன், சொல்லொணா துயரத்தில் ஏக்கத்துடன் தவிக்கும் ஈழ மக்களின் கண்ணீர் தோய்ந்த முகத்தினை ஒரு தடவை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.உங்கள் மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து மனிதநேயம் மிக்க மனிதன் என்ற ரீதியில் வாக்களியுங்கள்.


தமிழினம் சாதாரணமான ஒரு இனம் அல்ல. உலக வரலாற்றில் சரித்திரம் படைத்ததும் தொன்றுதொட்டே மேன்மையானதுமான ஒரு இனம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழினத்தினை அழிக்க பலவழிகளில் முயல்கின்றன பல நாசகார சக்திகள்.
முதலில் ஈழ தமிழரை குறிவைத்திருக்கும் அந்த நாசகார சக்திகளின் அடுத்த இலக்கு உங்களை நோக்கியும் திரும்பும் எம் தமிழ் தமிழக உறவுகளே!


குறிப்பிட்ட ஒரு கட்சிக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டும் என்று வற்புறுத்தவில்லை.தமிழின எதிர்ப்புக் காங்கிரஸும் அதன் கூட்டணியும் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்பது கங்கிரஸின் துரோகத்தனத்தினால் செத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் எதிர்பார்ப்பும் பணிவான வேண்டுதலும் ஆகும்.


தமிழக அன்புள்ளங்களே! நாங்கள் உங்களை முழுமையாக நம்புகின்றோம். உங்கள் சொந்தங்கள் அழிக்கப்படுவதைப் பார்த்து துடிதெழுந்தவர்கள் நீங்கள்! உங்கள் உணர்வுகளுக்குமுன் அரசியல் கபட நாடகங்கள், சதிகள் ஜெயிக்காது. ஜெயிக்கவும் விடமாட்டீர்கள் என்பது உறுதி!


ஈழ மக்களின் அவலங்களைப் பார்த்து உருவான உங்களின் மனப்பாரங்களை வாக்குப் பெட்டிகளில் இறக்கிவையுங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான வாக்குகளாய்...!


புலம்பெயர் தேசத்திலிருந்து,
ஒரு ஈழத்தமிழன்,
[பருத்தியன்]

Friday, May 8, 2009

உலகத் தமிழரிடமிருந்து தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்




தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



பேரன்புடையீர்,

அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த ஈழத்தின் வன்னித்தமிழ் மக்களின் வாழ்வியலை முழுமையாகச் சிதைத்து சின்னாபின்னப்படுத்திமிகப்பெரிய மனித அவலத்தில் அவர்களை பலவந்தமாகத்தள்ளியதில் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வாசகத்ததைப் பயன் படுத்தி முழுத்தமிழினத்தையே அழிக்க திருமதி சோனியாகாந்தி அம்மையார் எடுத்த முடிவு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான ஓர் இனப்படுகொலையென்பதை

சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் போதிய சந்தர்ப்பம் உண்டு.

உலகிலுள்ள 9 கோடித் தமிழ்மக்களும் விடுத்த அனைத்து வேண்டுகோள்களையும்நிராகரித்த காங்கிரசுக் கட்சி தொடச்சியாக ஈழத்தமிழினத்தை கொலைசெய்யும் சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நிற்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட தமிழக வாக்காளர்களுக்கு அரியசந்தர்ப்பமாக மே 13ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தல் வாய்த்துள்ளது.

தமிழின உணர்வாளர்களே காங்கிரசுக்கட்சிக்கு நீங்கள் வாக்களிக்காமல் விடுவதன்மூலம் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் முடிவு தவறானது என்பதைப் புரியவைக்க முடியும்.

தமிழ் நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர்கூட இம்முறைதேர்ந்தெடுக்கப்படக்கூடாதென்பதே உலகத்தமிழனித்தின் வேண்டுகோளாகும்.

தமிழ்நாட்டுமக்களின் தீர்ப்பையறிய பல நாடுகள் மாத்திரமல்ல ஐக்கியநாடுகள்சபையும் ஆவலாக இருக்கிறதென்பதை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வேண்டுகோளைவிடுக்கும் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் வருமாறு:-

1.உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கம் ஐரோப்பிய ஒன்றியம் ( பதிவு இல:VR.1116)

2.புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் யேர்மனி (பதிவு இல:- (VR.757)

3.தமிழர் கலாச்சார நற்பணி மன்றம் யேர்மனி (பதிவு: VR.296)

4.சர்வதேசப் புலம்பெயர் தமிழ்எழுத்தாளர் ஒன்றியம் (பதிவு:-VR.5895)

5.தமிழ்மன்றம் யேர்மனி (பதிவு VR-9746)

6..ஈழத்தமிழர் நலன்புரிக்கழகம் யேர்மனி (பதிவு-VR 10369)

7.பாரதிகலைக்கூடம் யேர்மனி (பதிவு-VR-4862)

8.தமிழர் ஒன்றியம் யேர்மனி (VR-10012)

matrum or Manamulla Tamilga thamilan

Eelaa thamilargalin unmai nilai

En uravugale, Please understand the Tamils of Eelaam, this motion picture Directly hits the truth, This is real and true position of People in Eelaam, save our bloods, Great Thanks to Vijay tv and PremGopal thavipudan Thamilan