Thursday, July 16, 2009

ஓலம்






கடலோரம் பெருவனங்கள்
கரைநெடுக நெடுமரங்கள்
படல்வீடே ஈழமுகம்
பண்பாடே ஈழநிலம்

படகெல்லாம் மீன்கள்வளம்
படுகரையில் உப்பின் அளம்
குடிதோறும் தென்னைவளம்
குறும்பலா தரைதவழும்
கரையோரம் நெய்தல்நிலம்
கரைதாண்டி முல்லைவளம்
மருத நிலம் நடுநாடு



மண்மனக்கும் வயற்காடு
பழந்தமிழர் கொல்லையயலாம்
பனைமரங்கள் எல்லைகளாம்
பழம்பதியின் முதற்குறியே
பனைமரத்தின் முகவரியே
நான்குநிலம் கொண்டதனால்
நானிலமே எமதீழம்
நன்னிலத்தில் நெல்வாழை
கன்னலுக்குக் கரும்பாலை
நான்குநிலம் கொடுங்கோலாய்
அஞ்சு (ம்)நிலம் ஆனகதை
ஈழயினம் சிங்களத்தால்
ஏழையினம் ஆனகதை
அஞ்சும்நிலம் தடைமீறி
மிஞ்சிநின்ற வேரின்கதை
சிங்கத்தை வேங்கையினம்
சீறிநின்ற போரின்கதை
ஞாலமெல்லாம் எம்மினத்தை
நடுக்களத்தில் விற்றகதை
ஓலமிட்டு லட்சம்பேர்
உலைக்களத்தில் வெந்தகதை
கண்ணுள்ளார் காணவில்லை
காதுள்ளார் கேட்கவில்லை
குழந்தைகளை மீட்கவில்லை
குமரிகளைக் காக்கவில்லை
வதை தடுப்பதற்காய்
வேண்டினோம் டெல்லிக்கொடி
வதையை நிறுத்திவிட
வணங்குகிறோம் தொப்புள்கொடி
எக்கொடியும் வரவில்லை
இக்கொடியர் போர்நிறுத்த
வக்கரித்த தேர்தலிலே
வாக்களித்த தமிழர்களே
மீளவும்யாம் எண்ணுகையில்
நாளைஉயிர் யார் கையில்?
ஈழமின்று நிலச்சிறையாய்
வேலியிட்ட வெலிக்கடையாய்...
ஒருகுவளை நீருக்கும்
ஒருகவளம் சோற்றுக்கும்
எம்நிலத்தில் கையேந்தி
எம்குலத்தோர் வேகையிலும்
நம்பிக்கை தளரவில்லை
நட்சத்திரம் இருளவில்லை
நம்பிக்கை உயிர்த்தெழும்பும்
சரித்திரத்தைப் பெயர்த்தெழுதும்!

-கவிஞர் தணிகைசெல்வன்